கட்டிட தொழிலாளிக்கு கத்திவெட்டு

பாகூரில் முன்விரோத தகராறில் கட்டடிட தொழிலாளியை கத்தியால் வெட்டியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர்
பாகூர் அடுத்த கீழ்பரிக்கல்பட்டு ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 34). கட்டிட தொழிலாளி. கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆற்றுத் திருவிழாவின்போது அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (32) பட்டாசுகளை வெடித்து சாமி ஊர்வலத்துக்கு இடையூறு செய்தார். இதை சீனிவாசன் மற்றும் ஊர் பிரமுகர்கள் கண்டித்தனர். இதனால் சீனிவாசனுக்கும், சுரேசுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்தநிலையில் நேற்று மேல்பரிக்கல்பட்டு பகுதியை சேர்ந்த 2 பேரிடம் சுரேஷ் தகராறில் ஈடுபட்டார். அப்போது வந்த வழியாக வந்த சீனிவாசன், சுரேசை தட்டிக்கேட்டார். ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்த நிலையில் ஆத்திரமடைந்த அவர், சீனிவாசனை கத்தியால் வெட்டினார். மேலும் வெடிகுண்டு வீசி குடும்பத்தோடு கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். கத்தி வெட்டில் தலை, கையில் காயமடைந்த சீனிவாசன் பாகூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சுரேசை தேடி வருகின்றனர்.