அரசு மீது நாராயணசாமி ஆதாரமற்ற குற்றச்சாட்டு


அரசு மீது நாராயணசாமி ஆதாரமற்ற குற்றச்சாட்டு
x

புதுவையில் அரசு மீது நாராயணசாமி ஆதாரமற்ற குற்றச்சாட்டியதாக அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் கண்டனம் தெரிவித்தார்.

புதுச்சேரி

புதுவை மாநில அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று உப்பளத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் அன்பானந்தம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அன்பழகன் கலந்துகொண்டு பேசியதாவது:-

ராகுல்காந்தி விவகாரத்தில் குஜராத் ஐகோர்ட்டையும், நீதிபதியையும் தரக்குறைவாக பேசிய புதுச்சேரி காங்கிரசார் மீது வழக்குப்பதிவு செய்ய டி.ஜி.பி.க்கு கோர்ட்டு உத்தரவிட வேண்டும். புதுச்சேரி அரசு மீது முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இதனை அ.தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது. அ.தி.மு.க.வை பொருத்தமட்டில் நாங்கள் சட்டமன்றத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களின் பிரச்சினைக்காக போராடி வருகிறோம். ஆனால் தி.மு.க. எதையும் செய்யவில்லை. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும். ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்கு புதுவையில் இருந்து நூற்றுக்கணக்கான வாகனங்களில் செல்ல இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், கணேசன், துணை தலைவர் ராஜாராமன், பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில துணைச் செயலாளர்கள் உமா, கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story