முகக்கவசம் அணிய பொதுமக்கள் தயக்கம்

புதுவையில் முகக்கவசம் கட்டாயம் என்ற அரசின் உத்தரவை கடைபிடிக்க பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
புதுச்சேரி
முகக்கவசம் கட்டாயம் என்ற அரசின் உத்தரவை கடைபிடிக்க பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
கட்டுப்பாடுகள்
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உயர்ந்து வருகிறது. புதுவையிலும் இந்த தொற்று பாதிப்பு நாள்தோறும் உயர்ந்து வருகிறது.
இதைத்தொடர்ந்து புதுவையில் சில கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. குறிப்பாக பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் கலெக்டர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கும் வந்துள்ளது.
முகக்கவசம்
இருந்தபோதிலும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் இன்னும் வரவில்லை. முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அரசு அறிவித்துள்ள நிலையில் நேற்று பொது இடங்களில் திரிந்த பொதுமக்கள் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணியவில்லை.
ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே முகக்கவசம் அணிந்திருந்தனர். அதே நேரத்தில் சுற்றுலா பயணிகளும் முகக்கவசம் அணியாமலேயே புதுவையை வலம் வந்தனர்.