தீக்குளித்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சாவு


தீக்குளித்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சாவு
x

புதுவை கான்பேட் அலுவலகத்தில் தீக்குளித்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

புதுச்சேரி

புதுவை கான்பேட் அலுவலகத்தில் தீக்குளித்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்

புதுச்சேரி வெங்கட்டா நகர் நேரு நகரை சேர்ந்தவர் சோபிதகுமார் (வயது 62). அரும்பார்த்தபுரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் பணி ஓய்வு பெற்று 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் பணிக்கொடை வழங்கப்படவில்லை.

இதுதொடர்பாக அவர் அடிக்கடி அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளிடம் முறையிட்டு வந்தார். இருப்பினும் பணிக்கொடை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

நேற்று தட்டாஞ்சாவடியில் உள்ள கான்பேட் மேலாண் இயக்குனர் அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளிடம் சோபிதகுமார் முறையிட்டார். அப்போது ஒரு வாரத்தில் பணிக்கொடை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிகிச்சை பலனின்றி சாவு

கால் கடுக்க 3 ஆண்டுகள் நடந்தும் தனக்கு வரவேண்டிய பணம் கிடைக்காததால் விரக்தி அடைந்த சோபிதகுமார், கான்பேட் அலுவலக வளாகத்தில் பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் முழுவதும் தீ பரவியதால் அலறி துடித்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று இரவு 8 மணி அளவில் அவர் பரிதாபமாக இறந்தார்.

ஏற்கனவே காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்தது. அந்த வடு மறைவதற்குள் அரசு அலுவலகத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

போலீசில் புகார்

இந்த நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் சோபிதகுமார் உறவினர்கள் நேற்று இரவு கோரிமேடு போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அவர்கள், கான்பேட் மேலாண் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்தனர்.


Next Story