வழிதவறி வந்த மூதாட்டியை மீட்ட போலீசார்

கிருமாம்பாக்கம் அடுத்த ஈச்சங்காட்டு பகுதியில் வழிதவறி வந்த மூதாட்டியை மீட்ட போலீசார் அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்,
பாகூர், ஏப்.24-
கிருமாம்பாக்கம் அடுத்த ஈச்சங்காட்டு பகுதியில் 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தனியாக இரவு நேரத்தில் நடந்து வந்துள்ளார். அங்கிருந்த மக்கள் அவரிடம் விசாரித்தபோது, அவர் சரியாக பதில் கூறவில்லை. பசியில் இருந்த அவருக்கு உணவு அளித்து கவனித்து வந்தனர்.
இது தொடர்பாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கிருமாம்பாக்கம் போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர் லூர்துநாதன், போலீஸ்காரர் ஞானமூர்த்தி ஆகியோர் மூதாட்டியை மீட்டு விசாரித்தனர். அப்போதும் அவர் சரியாக பதில் கூறவில்லை.
இதையடுத்து மூதாட்டியின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, அவர் குறித்த விவரம் தெரிந்தால் போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்திருந்தனர். சமூக வலைதளத்தில் மூதாட்டியின் புகைப்படத்தை பார்த்த ரெட்டிச்சாவடி பகுதியை சேர்ந்த அவரது குடும்பத்தினர் கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, வீட்டில் இருந்து வெளியே சென்ற மூதாட்டி, ஞாபக மறதியால் வழிதவறி சென்றுவிட்டதாகவும், அவரது பெயர் பொன்னம்மாள் (வயது 90) என்றும் தெரிவித்தனர். இதையடுத்து மூதாட்டியை அவரது குடும்பத்தினருடன் போலீசார் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.