புதுவையில் குவிந்த சுற்றுலா பயணிகள்


புதுவையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

தொடர் விடுமுறை எதிரொலியாக புதுவையில் வெளிமாநில சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

புதுச்சேரி

தொடர் விடுமுறை எதிரொலியாக புதுவையில் வெளிமாநில சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

சுற்றுலா பயணிகள்

புதுச்சேரியில் வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் வெளிமாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். இந்தநிலையில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி வார விடுமுறையான நேற்று (சனி), இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் அரசு விடுமுறை என தொடர் விடுமுறை வருவதால், புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். சுற்றுலா பயணிகளின் வருகையால் தங்கும் விடுதிகள் நிரம்பி வழிகிறது. இதனால் பலர் புதுவை எல்லையில் உள்ள தமிழக பகுதியான கோட்டக்குப்பம், ஆரோவில் பகுதியில் உள்ள விடுதிகளில் அறை எடுத்து தங்கினர்.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் உணவகம் உள்ளிட்ட கடைகளில் வியாபாரம் களை கட்டியது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

போக்குவரத்து நெரிசல்

புதுவை கடற்கரை, பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், அரசு அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஒய்ட் டவுன் பகுதிகளில் வெளிமாநில பெண்கள் இன்று காலை முதல் ஒய்யாரமாக வலம் வந்ததை காணமுடிந்தது. அவர்கள் கட்டிடங்களில் வரைந்திருந்த ஓவியங்களின் முன்பு நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

நகர் முழுவதும் வெளிமாநில பதிவெண்கள் கொண்ட வாகனங்கள் அதிகம் உலா வந்தன. இதனால் முக்கிய சந்திப்புகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.

தீவிர காண்காணிப்பு

சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் கடற்கரை சாலை பகுதியில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யா தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இன்று சண்டே மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. அவர்கள் தங்களுக்கு விருப்பமான பொருட்களை பேரம் பேசி வாங்கிச் சென்றனர்.

படகு சவாரி

நோணாங்குப்பம் படகுகுழாமிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் சுண்ணாம்பாற்றில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதேபோல் சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை, தவளக்குப்பம் அடுத்த பூ.புதுகுப்பம் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் கடலில் ஆனந்த குளியல் போட்டனர்.


Next Story