சட்டசபையை முற்றுகையிட முயன்றவவுச்சர் ஊழியர்களால் பரபரப்பு


சட்டசபையை முற்றுகையிட முயன்றவவுச்சர் ஊழியர்களால் பரபரப்பு
x

புதுச்சேரி வவுச்சர் ஊழியர்கள் பணிநிரந்தரம் மற்றும் உயர்த்தப்பட்ட சம்பளத்தை வழங்கக்கோரி சட்டசபையை முற்றுகையிட சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி

புதுச்சேரி வவுச்சர் ஊழியர்கள் பணிநிரந்தரம் மற்றும் உயர்த்தப்பட்ட சம்பளத்தை வழங்கக்கோரி சட்டசபையை முற்றுகையிட சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வவுச்சர் ஊழியர்கள்

புதுவை மாநிலத்தில் பொதுப்பணித்துறையில் 13 ஆண்டுகளாக 1,500 வவுச்சர் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் 740 பேர் அரசு மருத்துவக்கல்லூரியில் பணிநிரந்தரம் செய்யப்பட்டனர். இந்தநிலையில் மீதமுள்ளவர்களையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் வவுச்சர் ஊழியர்களுக்கு ரூ.18 ஆயிரமாக சம்பளம் அறிவிக்கப்பட்டது. இதுவரை அவர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளம் வழங்கப்படவில்லை.

இந்தநிலையில் அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பினர் பணிகளை புறக்கணித்து பொதுப் பணித்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருபவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், உயர்த்தப்பட்ட ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி சட்டசபை அருகே 100-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்.

சட்டசபை முற்றுகை

அதைத்தொடர்ந்து அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சட்டசபையை முற்றுகையிட சென்றனர். அவர்களை பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்களுக்கும்-போலீசாருக்கும் இடையே லேசான தள்ளு-முள்ளு நடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதையடுத்து அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகிகளை மட்டும் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளிக்க அனுமதித்தனர். அவர்கள் தங்களின் கோரிக்கை மனுவை முதல்-அமைச்சரை சந்தித்து வழங்கினர். அப்போது வவுச்சர் ஊழியர்களுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) உயர்த்தப்பட்ட சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதையேற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story