கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணிப்பு


கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணிப்பு
x

கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தனர்.

வில்லியனூர்

கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தனர்.

கிராம சபை கூட்டம்

புதுவை மாநிலம் முழுவதும் காந்தி ஜெயந்தி முன்னிட்டு நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. அதன்படி நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கரிக்கலாம்பாக்கம் கிராம பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதற்காக காலை 9 மணிக்கு அதிகாரிகள் கூட்டம் நடத்த வந்தனர். இதில் கலந்து கொண்ட பொதுமக்கள், ஏற்கனவே 5 கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றை கூட நிறைவேற்றாத நிலையில் இந்த கிராம சபை கூட்டம் எதற்கு? என்று கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.

பொதுமக்கள் புறக்கணிப்பு

குறிப்பாக கரிக்கலாம்பாக்கம் பகுதியில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு, சாலை மேம்பாடு, கரிக்கலாம்பாக்கம் மயானத்துக்கு செல்லும் சாலை, தெருவிளக்கு வசதிகள் செய்யப்படாதது குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இந்தநிலையில் தற்போது விவசாய நிலங்கள் முறைகேடாக மனைகளாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பேனர், கட்-அவுட் தலைதூக்குவது குறித்தும் முறையிட்டனர். அடுக்கடுக்காக புகார்களை கூறிய பொதுமக்கள், கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து சென்றனர். இதனால் அதிகாரிகள் ஏமாற்றமடைந்தனர்.


Next Story