'நீட்' தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் என்பது என்ன?

மத்திய அரசு அறிவித்துள்ள ‘நீட்’ தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் குறித்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
புதுச்சேரி
மத்திய அரசு அறிவித்துள்ள 'நீட்' தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் குறித்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
பூஜ்ஜியம் மதிப்பெண்
புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வில் 'பூஜ்ஜியம்'மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் அவர்களுக்கு கல்லூரியில் சேர இடம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுபோல தவறாக விமர்சிப்பவர்களுக்கு முதலில் "நீட்" தேர்வு கட் ஆப் மதிப்பெண், "பூஜ்ஜியம் பர்சன்டைல்" என்றால் என்ன? என்பதை பற்றிய புரிதல் வேண்டும்.
நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு மருத்துவம் மேற்படிப்பு படிக்க இடம் கிடைக்காது என்பது உண்மை. நீட் தேர்வில் வெற்றி பெற குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்தால் மட்டுமே மருத்துவ மேற்படிப்பில் சேரலாம்.
கண்டனம்
முதுநிலை மருத்துவ மேற்படிப்பில் இடங்கள் முழுமையான நிரம்பிய பின்னர் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு கட் ஆப் மதிப்பெண்கள் பெற முடியாத மாணவர்கள் பயன்பெறும் வகையில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் காலியாக உள்ள இடங்களை பயன்படுத்திக் கொள்ளும் இந்த முறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு முதுநிலை மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காது. குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்று காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கே இந்த முறை. இதுபற்றி புரிதல் இல்லாதவர்கள், மாணவர்களை குழப்பி தவறான எண்ணங்களை கொண்டு சேர்க்கின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.






