காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் பெண் தீக்குளிப்பு


வாங்கிய கடனை திரும்ப தராததால் விரக்தி அடைந்த பெண் காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் தீக்குளித்தார். அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி

வாங்கிய கடனை திரும்ப தராததால் விரக்தி அடைந்த பெண் காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் தீக்குளித்தார். அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரூ.5 லட்சம் கடன்

புதுச்சேரி காலாப்பட்டு அருகே உள்ள பிள்ளைச்சாவடி சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் மீனவர் சந்திரன். இவரது மனைவி கலைச்செல்வி (வயது 35). இவர் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரது மனைவி ராஜகுமாரிக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5 லட்சத்தை வட்டிக்கு கொடுத்தார். அதற்கு அவர் மாதந்தோறும் வட்டி கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ராஜகுமாரி வட்டியை சரியாக கொடுக்கவில்லையாம். கலைச்செல்வி பலமுறை கேட்டும், அவர் பணத்தை திரும்ப கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார்.

வாக்குவாதம்

இதற்கிடையே கலைச்செல்வி குடும்பத்தினருக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டது. எனவே கணவன்-மனைவி இருவரும் ஏழுமலையின் வீட்டிற்கு சென்று, கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இது குறித்து ஏழுமலை காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து சந்திரன், கலைச்செல்வி ஆகியோரை விசாரணைக்கு வரும்படி போலீசார் அழைத்துள்ளனர். இது தொடர்பான விசாரணை நேற்று காலை காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் நடந்தது.

அப்போது கடன் வாங்கிய ஏழுமலையையும் அவரது மனைவியையும் போலீசார் இருக்கையில் அமர வைத்தும்,, சந்திரன், கலைச்செல்வியை நிற்க வைத்தும் போலீசார் விசாரணை நடத்தியதாக தெரிகிறது.

தீக்குளித்தார்

இதனால் விரக்தி அடைந்த கலைச்செல்வி, போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்தார். போலீஸ் நிலையம் முன் நிறுத்தியிருந்த அவரது இருசக்கர வாகனத்தில் கேனில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்துக்கொண்டு போலீஸ் நிலையம் உள்ளே சென்று, தனது பணத்தை தரவில்லை என்றால் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்.

பேசிக்கொண்டு இருக்கும்போதே திடீரென அவர் கையில் வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ குளித்தார். இதில் அவரது உடல் முழுவதும் தீ பற்றிக்கொண்டதால் வலி தாக்க முடியாமல் அலறியபடி போலீஸ் நிலையத்தின் உள்ளே அங்கும், இங்குமாக ஓடினார்.

கவலைக்கிடம்

இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரன் மற்றும் போலீசார் கலைச்செல்வி உடலில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயற்சி செய்தனர். அதற்குள் அவர் உடல் முழுவதும் எரிந்த நிலையில் சுருண்டு கீழே விழுந்தார்.

உடனே போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு கலைச்செல்வி கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உறவினர்கள் சாலை மறியல்

இதற்கிடையே காலாப்பட்டு போலீசாரை கண்டித்து கலைச்செல்வியின் உறவினர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர்.

கலைச்செல்வி தீக்குளித்தபோது பணியில் இருந்த போலீசார் மற்றும் கடன் வாங்கிவிட்டு பணத்தை திரும்ப கொடுக்காமல் இருக்கும் ராஜகுமாரி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள், உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் மீண்டும் போலீஸ் நிலையம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் மீண்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இன்று பேச்சுவார்த்தை

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். இது தொடர்பாக நாளை (வியாழக்கிழமை) போலீஸ் சூப்பிரண்டு சுவாதி சிங் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்பாக போலீஸ் நிலையத்தில் பெண் தீக்குளித்த சம்பவம், அதனை தொடர்ந்து நடந்த சாலைமறியல், முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story