தை மாதம் உலகத்தமிழ் மாநாடு


தை மாதம் உலகத்தமிழ் மாநாடு
x

புதுச்சேரியில் தை மாதம் உலகத்தமிழ் மாநாட்டை நடத்துவது தொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி

புதுச்சேரியில் தை மாதம் உலகத்தமிழ் மாநாட்டை நடத்துவது தொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார்.

உலகத்தமிழ் மாநாடு

புதுச்சேரியில் உலகத்தமிழ் மாநாடு நடத்தப்படும் என்று கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். இதைத்தொடர்ந்து உலகத்தமிழ் மாநாட்டை நடத்துவது தொடர்பாக கலை பண்பாட்டுத்துறை ஆயத்த ஏற்பாடுகளை செய்துள்ளது.

இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் காமராஜர் மணிமண்டபத்தில் இன்று நடந்தது. கூட்டத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். அப்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

அரசின் எண்ணம்

புதுச்சேரி தமிழ் வளர்ச்சியில் அக்கறை கொண்ட மாநிலம். கம்பன் விழா, இலக்கிய விழா என பல்வேறு தமிழ் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. புதுவை தமிழ் அறிஞர்களும் வெளிநாடுகளில் நடக்கும் பல்வேறு விழாக்களுக்கு சென்று வருகின்றனர்.

தமிழகத்தின் ஒரு அங்கம்போன்று புதுவை இருந்தாலும் இங்கும் உலகத்தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என்பது அரசின் எண்ணம். தமிழகத்தில் ஏற்கனவே உலகத்தமிழ் மாநாடு நடத்தி உள்ளனர். இந்த மாநாட்டிற்கு வெளிநாடுகளில் இருந்தும் தமிழ் அறிஞர்கள் வருவார்கள். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வந்து செல்வார்கள்.

எங்கு நடத்துவது?

இந்த மாநாட்டிற்கு தேவையான நிதியை புதுவை அரசு ஒதுக்கித்தரும். எனவே அதுதொடர்பான கவலை வேண்டாம். இந்த மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டும். மாநாட்டிற்கு எத்தனை பேர் வருவார்கள் என்பதை முதலில் தெரிவிக்கவேண்டும். அவர்களுக்கு தேவையான வசதிகளை நாம் செய்து தரலாம்.

2 அல்லது 3 நாட்கள் இந்த மாநாடு நடத்தப்பட வேண்டும். அதற்கு தேவையான குழுக்கள் போட்டு வருபவர்களை கவனித்துக்கொள்ளலாம். மாநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகள் இருக்கும். அவற்றை எங்கெங்கு நடத்தலாம் என்று திட்டமிட வேண்டும். குறிப்பாக கம்பன் கலையரங்கம், காமராஜர் மணிமண்டபம், பழைய துறைமுக வளாகம் உள்ளிட்ட இடங்களில் நடத்தலாம். இன்னும் இடங்கள் தேவையென்றால் திருமண மண்டபங்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்.

தை, மாசி

மாநாட்டின்போது சிலம்பம், புலியாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளையும் நடத்தலாம். மாநாட்டை வருகிற தை, மாசி மாதங்களில் நடத்தினால் நன்றாக இருக்கும். அதற்கு பின் நாடாளுமன்ற தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிவிடும். இல்லாவிட்டால் தேர்தல் முடிந்த பின்னர்தான் நடத்த முடியும்.

எனவே வெளிநாட்டில் உள்ள தமிழ் அறிஞர்களை தொடர்புகொண்டு பேசி அவர்கள் வர வாய்ப்பு உள்ளதா? எப்போது வருவார்கள் என்பதை கேட்டு தெரிவியுங்கள்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், செல்வகணபதி எம்.பி., கலை, பண்பாட்டுத்துறை செயலாளர் நெடுஞ்செழியன், இயக்குனர் கலியபெருமாள், புதுவை தமிழ்ச்சங்க தலைவர் முத்து, கம்பன் கழக தலைவர் சிவக்கொழுந்து உள்பட தமிழ் அறிஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story