வாலிபர் மீது பீர்பாட்டில் தாக்குதல்

தவளக்குப்பம் அருகே தகராறை தடுக்க முயன்ற வாலிபர் மீது பீர்பாட்டில் தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரியாங்குப்பம்
தவளக்குப்பம் ராஜாராம் நகர் செந்தாமரை வீதியை சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன் (வயது 25). அவரது உறவினர் ஆகாஷ் (25). இவர் தவளக்குப்பம்-நல்லவாடு ரோட்டில் உள்ள ரெஸ்டோ பாரில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு அங்கு தானம்பாளையத்தை சேர்ந்த அருண் என்ற அருணாச்சலம் மற்றும் நண்பர்கள் கூட்டாக மது குடிக்க வந்தனர். அப்போது அவர்கள் ஆகாசிடம் தகராறு செய்தனர்.
இதுகுறித்து ஆகாஷ் தனது உறவினரான ஜெயகிருஷ்ணனுக்கு தகவல் கொடுத்தார். உடனே அங்கு வந்த ஜெயகிருஷ்ணன் தகராறு செய்தவர்களை சமாதானப்படுத்த முயன்றார். அப்போது அவர்கள் ஜெயகிருஷ்ணனை பீர்பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண் மற்றும் அவரது கூட்டாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.