2026 தேர்தல் இரு துருவ போட்டியாக தான் இருக்கும்: திருமாவளவன்

தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று திருமாவளவன் கூறினார்.
சென்னை,
மாநிலங்களவை எம்.பியாக பொறுப்பேற்க உள்ள கமல்ஹாசனை விசிக தலைவர் தொல். திருமாவளவன் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஆகஸ்ட் மாதம் தனது பிறந்தநாள் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவும் கமல்ஹாசனுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது:-
திமுக தலைமையில் கூட்டணி வலுவாக உள்ளது. திமுகவை எதிர்ப்பவர்கள் இன்னும் ஒரு கூட்டணி வடிவத்தையே பெறவில்லை. அதிமுகவு, பாஜகவும் இன்னும் முரன்பாடாக தான் பேசிக்கொண்டிருக்கின்றனர். மற்ற கட்சிகள் எந்த கூட்டணியிலும் சேரவில்லை; கூட்டணியை உருவாக்குகிற முயற்சியிலும் ஈடுபடவில்லை.
திமுகவை எதிர்க்கக்கூடிய சக்திகள் சிதறி கிடக்கிறார்கள். முதல்-அமைச்சர் சொல்வது போல ஓரணியில் தமிழ்நாடு என்ற அடிப்படையில் திமுக கூட்டணி வலுப்பெற்று வருகிறது. திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். ஒரு கட்சி நெருக்கடிகளை சந்தித்து தான் வளர்ச்சி பெற முடியும்.
தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மத்தியிலும், மாநிலத்திலும் 3-வது அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தியதில்லை. 3-வது அணி உருவாக்கப்பட்டிருந்தாலும் அது வெற்றி பெறவில்லை. 2026 தேர்தல் இரு துருவ போட்டியாகதான் இருக்கும். வரும் தேர்தலில் திமுக கூட்டணியா? அதிமுக கூட்டணியா? என்பதே மக்களின் மனநிலையாக உள்ளது. திமுக, அதிமுகவை தாண்டி ஏற்படும் எந்த கூட்டணியும் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது. இவ்வாறு அவர் கூறினார்.






