ஈஷா மஹாசிவராத்திரி: கொங்கு மண்டலப் பகுதிகளில் ஆதியோகி ரத யாத்திரை - ஈரோட்டிற்கு 15-ம் தேதி வருகை


ஈஷா மஹாசிவராத்திரி: கொங்கு மண்டலப் பகுதிகளில் ஆதியோகி ரத யாத்திரை -  ஈரோட்டிற்கு 15-ம் தேதி வருகை
x
தினத்தந்தி 6 Jan 2026 3:40 PM IST (Updated: 6 Jan 2026 9:58 PM IST)
t-max-icont-min-icon

ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

ஈரோடு,

ஈஷா மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, தென்கைலாய பக்திப் பேரவை, சிரவை மற்றும் பேரூர் ஆதீனங்கள் இணைந்து நடத்தும் ‘ஆதியோகி ரத யாத்திரை’ கொங்கு மண்டலப் பகுதிகளில் உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. அதன்படி ஈரோட்டில் வரும் 15,16 ஆகிய இரண்டு நாட்கள் ஆதியோகி ரத யாத்திரை நடைபெற உள்ளது.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு ‘ஈரோடு தி ஒயாசிஸ் ரெஸ்டாரண்டில்’ நடைபெற்றது. இதில் தென்கைலாய பக்தி பேரவையின் அடியார்கள் ஆடிட்டர் ரவீந்திரன், தொழிலதிபர்கள் சிவசங்கரன் மற்றும் காந்திமதி ஆகியோர் பங்கேற்று பேசினர்.

ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாத பக்தர்கள் தங்களது ஊர்களிலேயே தரிசனம் செய்வதற்காகவும் இந்த ரத யாத்திரை நடத்தப்படுகிறது. தமிழகத்தின் நான்கு திசைகளிலும் பயணிக்கும் 4 ஆதியோகி ரதங்களை இந்த ஆண்டு தமிழ்நாட்டின் பாரம்பரிய ஆதீனங்களின் குருமகாசந்நிதானங்கள் தொடங்கி வைத்தனர்.

அந்த வகையில் கொங்கு மண்டலத்திற்கான ஆதியோகி ரத யாத்திரையை, கோவையில் உள்ள ஆதியோகி வளாகத்தில் கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி, தவத்திரு பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரும், தவத்திரு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளும் தொடங்கி வைத்தனர். குறிப்பாக கொங்கு மண்டலப் பகுதியில் உள்ள பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாக ரத யாத்திரை நடைபெறுகிறது.

கொங்கு மண்டலத்தில் கடந்த 23-ஆம் தேதி கோபிசெட்டிபாளையம் வந்தடைந்த ஆதியோகி ரதம் அந்தியூர், பவானி, சங்ககிரி, மேட்டூர், மேச்சேரி உள்ளிட்ட பல ஊர்களை கடந்து இன்று (06/01/2026) ராசிபுரத்தை வந்தடைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆதியோகி ரதம் நாளை 7-ஆம் தேதி நாமக்கல் கொல்லிமலை அறப்பளீஸ்வர் கோவிலுக்கு பயணிக்க உள்ளது. பின் 8-ஆம் தேதி திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் திருமலை அடிவாரத்தில் அமைந்துள்ள கைலாசநாதர் திருக்கோவிலுக்கும், 9-ஆம் தேதி வேலாயுதம்பாளையத்திற்கும் ரதம் பயணிக்கும்.

அடுத்ததாக ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கரூரிலும், 12-ஆம் தேதி கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோவில் வழியாகவும், 13-ஆம் தேதி வெள்ளக்கோவில், 14-ஆம் தேதி காங்கேயம் வழியாக பயணித்து, ஜனவரி 15 ஈரோடு மாநகரை வந்தடைகிறது. ஈரோடு மாநகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்கள் ரத யாத்திரை நடைபெற உள்ளது. பின்னர் 17-ஆம் தேதி பெருந்துறைக்கும், 18-ஆம் தேதி சத்தியமங்கலத்திற்கும் இந்த ரத யாத்திரை செல்ல உள்ளது. அதேபோன்று ஜனவரி 19-ஆம் தேதி முதல் அவினாசி, பல்லடம், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி பகுதிகளில் ரத யாத்திரை நடைபெற உள்ளது.

கோவையில் நடைபெறும் ஈஷா மஹாசிவராத்திரி விழா தமிழகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரலை செய்யப்பட உள்ளது. அந்த வகையில் ஈரோட்டில் மகேஸ்வரி மஹால், கோபி மற்றும் சேலத்தில் அமைந்துள்ள லிங்க பைரவி கோவில், திருப்பூரில் ஹார்வி குமாரசாமி கல்யாண மண்டபம் மற்றும் இராசிபுரம், மேட்டூர், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை செய்யப்பட்டு கொண்டாடப்பட உள்ளது.

ஆதியோகி ரதங்கள், 7 அடி உயரமுடைய ஆதியோகி திருவுருவச் சிலையுடன் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைக்கப்பட்ட மொத்தம் 4 ரதங்கள், தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் யாத்திரை மேற்கொண்டு வருகின்றன. இந்த ரதங்கள், மஹாசிவராத்திரி வரையிலான இரண்டு மாத காலத்தில், 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் 250-க்கும் மேற்பட்ட பாடல் பெற்ற சிவத்தலங்கள் வழியாக சுமார் 30,000 கிலோமீட்டர் பயணிக்க உள்ளன.

ஆதியோகி ரதங்கள் பயணிக்கும் இடங்களில், அங்குள்ள ஆதீனங்கள், முக்கிய பிரமுகர்கள், சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் பலர் சிறப்பான வரவேற்பை வழங்கி வருகின்றனர். ஆதியோகிக்கு விருப்பம் உள்ள மக்கள் தீபாராதனை, மலர்கள், பழங்கள் மற்றும் நைவேத்தியங்களை அர்ப்பணிக்கலாம்.

இதனுடன், ‘சிவ யாத்திரை’ எனும் பாதயாத்திரையை சிவாங்கா பக்தர்கள் ஆண்டுதோறும் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் கர்நாடகாவிலிருந்து, ஆதியோகி சிவன் திருவுருவம் தாங்கிய தேர்களை இழுத்தபடி அவர்கள் வருகின்றனர். அத்துடன், 63 நாயன்மார்களின் திருவுருவங்களைத் தாங்கிய ஒரு தேருடன் அடியார்கள் பாதயாத்திரையாக கோவை ஆதியோகி வளாகத்திற்கு வருகை தர உள்ளனர்.

முன்னதாக தமிழகத்தின் தெற்கு மண்டலத்திற்கான ஆதியோகி ரத யாத்திரையை டிசம்பர் 23-ஆம் தேதி, மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார். அதேபோன்று வடக்கு மண்டலத்திற்கான ரத யாத்திரையை, காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழாவில், தொண்டை மண்டல ஆதீனத்தின் 234-வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல ஞானப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி தீப ஆரத்தி காட்டி தொடங்கி வைத்தார்.

1 More update

Next Story