‘இந்திய வானில் இன்னொரு வெற்றித் திலகம்'- கவிஞர் வைரமுத்து பெருமிதம்

தகவல் தொடர்பு செயற்கைக்கோள் சி.எம்.எஸ்-03 உடன் எல்.வி.எம்.-3 எம்-5 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
சென்னை,
இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் சி.எம்.எஸ்-03 உடன் எல்.வி.எம்.-3 எம்-5 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது.
இதையொட்டி, கவிஞர் வைரமுத்து தனது ‘எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
"எழுந்துநின்று கைதட்டு
இந்தியாவே!
குமரிக் கடலின்
அலையாடல்களும்
இமயத்து நதியின்
உரையாடல்களும்
இஸ்ரோவை வாழ்த்துக
சி.எம்.எஸ் – 03
இந்தியாவின்
விலாசம் எழுதிவிட்டது
விண்வெளியில்
4410கிலோ
கனஎடை கொண்ட
கோள்களையும்
விண்ணில் ஏவ முடியுமென
இந்தியாவின்
சொந்தக்கால்கள் சொல்லுகின்றன
இந்திய வானம்
தன் நெற்றியில்
இன்னொரு வெற்றித் திலகம்
இட்டுக்கொண்டுவிட்டது
பூமியின்
மூன்றிலொரு பங்கைக்
கண்காணிக்கும் இந்தக்
கடவுளின் கண்கள்
இமைப்பதும் இல்லை;
தூங்குவதும் இல்லை
இன்று
உலக நீரோட்டத்தோடு இந்தியா
நாளை
இந்திய நீரோட்டத்தோடு உலகம்"
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






