ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு - வரி வசூலை நிறுத்தி வைக்க ஐகோர்ட்டு உத்தரவு

2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில், வரி பாக்கியை செலுத்த வேண்டும் என்று கூறி ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
அந்த நோட்டீசை எதிர்த்து தீபா தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், ஜெயலலிதாவின் மற்றொரு வாரிசாக அறிவிக்கப்பட்டிருந்த தீபக்கும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தார்.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “வருமான வரி பாக்கியை பொறுத்தவரை முதலில் 36 கோடி ரூபாய் என்றும், பிறகு 13 கோடி ரூபாய் என்றும் வருமான வரித்துறை தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும், சரியான தொகையை தெரிவித்தால் அந்த தொகையை செலுத்த தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வரி பாக்கி குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்யும்படி வருமான வரித்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி சி.சரவணன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஐகோர்ட்டு உத்தரவின்படி வருமான வரி பாக்கி குறித்து வருமான வரித்துறை தரப்பில் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை என தீபா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வருமான வரி பாக்கி குறித்து 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என வருமான வரித்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, அதுவரை வரி பாக்கி வசூல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.






