அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயற்சித்த வழக்கு - 15 பேர் விடுதலை

கோப்புப்படம்
சீனுவாசன் உள்பட 5 பேர் விசாரணையின் போதே மரணமடைந்தனர். மீதமுள்ள 15 பேரையும் நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.
விழுப்புரம்,
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கடந்த 2006 ல் திண்டிவனத்தில் உள்ள தனது வீட்டில் அமர்ந்து கட்சியினருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆயுதங்களுடன் வந்த கும்பல் அவரை தாக்கிக் கொல்ல முயற்சி செய்தது.
சி.வி. சண்முகம் உடனடியாக காருக்கு அடியில் புகுந்து அவர் உயிர் தப்பினார். ஆனால், அவரது உறவினரும், அதிமுக தொண்டருமான முருகானந்தம் கொல்லப்பட்டார். இக்கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு தொடர்பாக பாமகவைச் சேர்ந்த சீனுவாசன், கருணாநிதி, குமரவேல் பிரதீபன், ரகு, குமரன், சிவா உள்ளிட்ட 20 பேர் மீது ரோஷணை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் வழக்கில் கைதான பாமகவினர் 15 பேரை விடுதலை செய்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. 2011ம் ஆண்டு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட இவ்வழக்கில், ராமதாஸ் சகோதரர் சீனுவாசன் உள்பட 20 பேர் குற்றம் சாட்டப்பட்டனர். சீனுவாசன் உள்பட 5 பேர் விசாரணையின் போதே மரணமடைந்தனர். மீதமுள்ள 15 பேரையும் நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.






