சென்னை: சாலையில் நடந்துசென்ற பெண் டாக்டரை செல்போனில் வீடியோ எடுத்தவர் கைது

பெண் டாக்டரை வீடியோ படம் எடுத்த நபரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.
சென்னை,
சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் வசந்தி (வயது 30), பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஓமியோபதி டாக்டரான இவர், தேனாம்பேட்டையில் சொந்தமாக கிளினிக் நடத்தி வருகிறார். இவரது கணவரின் அலுவலகம் ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ளது.
கணவரை சந்திப்பதற்காக வசந்தி அங்கு சென்றார். டி.டி.கே. சாலையில் செல்லும்போது அவரை பின்தொடர்ந்து சென்ற ஒரு நபர், வசந்தியை தனது செல்போனில் ‘வீடியோ படம்' பிடித்துள்ளார். இதை வசந்தி கண்டித்துள்ளார். ஆனால் அந்த நபர் தொடர்ந்து வசந்தியை படம் பிடித்ததாக தெரிகிறது.
இதனால் வசந்தி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்தார். அங்கிருந்த போலீசார் வசந்தியை ‘வீடியோ படம்' பிடித்த நபரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அந்த நபர் நெற்குன்றத்தை சேர்ந்த விஜயகுமார் (47) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவர் வீடியோ படம் எடுக்க பயன்படுத்திய செல்போனை பறிமுதல் செய்தனர்.






