ரெயிலில் சென்ற இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை

போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
சேலம்,
திருப்பத்தூரை சேர்ந்தவர் செந்தில் (வயது 43). இவரது மனைவி பத்மா. இவர்களுக்கு நந்தினி (19), மதுமிதா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இதில், 2-வது மகள் மதுமிதா திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், தனது மூத்த மகள் நந்தினியையும் அங்கு வேலைக்கு சேர்த்து விடுதற்காக பத்மா, அவரது மாமியார் தேவயானி ஆகியோர் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் பாட்னா-எர்ணாகுளம் ரெயிலில் ஏறி திருப்பூருக்கு சென்றனர்.
அப்போது, ரெயில் சேலத்தை கடந்து சென்றநிலையில் நந்தினி கழிவறைக்கு செல்வதாக கூறி சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தேவயானி ரெயிலில் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சேலம் ரெயில் நிலையத்தில் நந்தினியை காணவில்லை என்று அவரது தாயார் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான நந்தினியை தேடி வருகின்றனர். அவர் திருப்பூருக்கு வேலை செல்ல விருப்பம் இல்லாமல் சேலத்தில் இறங்கினாரா? அல்லது காதல் விவகாரத்தில் அவரை யாரேனும் கடத்தினார்களா? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






