

திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தையம் தும்பச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்புச்சாமி (வயது 50). இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களது மகளுக்கு திருமணமாகி அவர் தனியாக வசித்து வருகிறார். மகன் சென்னையில் தங்கி, நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். ஒட்டன்சத்திரம்- தாராபுரம் பைபாஸ் சாலை பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் கருப்புச்சாமி தனது மனைவியுடன் வசித்து வந்தார்.
நேற்று இரவு தம்பதி வீட்டின் வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள் திடீரென்று வந்து தம்பதியினரை கத்தியை காட்டி மிரட்டி வீட்டுக்குள் அழைத்துச் சென்று கட்டிப்போட்டுவிட்டு பீரோவில் இருந்த 18 பவுன் நகைகளையும், ரூ.38 ஆயிரத்தையும் கொள்ளையடித்தனர். அதன்பின்பு தம்பதியினரின் செல்போன்களையும் பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.