பெண் மருத்துவர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமண ஏற்பாடு செய்ததால் விபரீத முடிவு

கோப்புப்படம்
பெற்றோர் திருமண ஏற்பாடு செய்ததால் மனமுடைந்த பெண் மருத்துவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை சுப்பிரமணிய நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகள் அமிர்த வர்ஷினி (24 வயது). பல் மருத்துவரான இவருக்கு, திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்து வந்ததாக தெரிகிறது. அதற்கு அமிர்த வர்ஷினி, தற்போது திருமணம் வேண்டாம் என கூறி வந்துள்ளார். இருப்பினும் அவருடைய குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த அமிர்த வர்ஷினி, வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைபார்த்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அமிர்த வர்ஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்துக்கு பெற்றோர் ஏற்பாடு செய்ததால் மனமுடைந்த பெண் மருத்துவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






