காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை உள்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு

கோப்புப்படம்
புதுமாப்பிள்ளை, அவரது உறவினர்களை பெண்ணின் உறவினர்கள் சரமாரியாக தாக்கினர்.
வேளாங்கண்ணி,
கர்நாடக மாநிலம் பெங்களூரு நாகவாடா பகுதியை சேர்ந்தவர் டேனியல்(வயது 49).இவரது மனைவி கலையரசி(38). இவர்களது மகன் ராகுல்(22). இவரது நண்பர் பிரகாஷ்(34) ஆகிய 4 பேரும் நேற்று முன்தினம் வேளாங்கண்ணிக்கு வந்தனர். இவர்கள் வேளாங்கண்ணிக்கு வந்தபோது தனது மகன் ராகுல் காதலித்த பெண்ணையும் தங்களுடன் அழைத்து வந்தனர். வேளாங்கண்ணி பேராலயத்தில் வைத்து தங்கள் மகனுக்கும், அவர் காதலித்த பெண்ணுக்கும் நேற்று முன்தினம் திருமணம் செய்து வைத்தனர்.
இந்த நிலையில் ராகுல் காதலித்த பெண்ணின் உறவினர்கள் இதுகுறித்த தகவல் அறிந்து நேற்று வேளாங்கண்ணிக்கு வந்தனர். விடுதியில் தங்கி இருந்த ராகுல் மற்றும் அவரது பெற்றோர், நண்பர் உள்பட 4 பேரையும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அந்த பெண்ணை தங்களுடன் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தில் காயம் அடைந்த டேனியல், கலையரசி, ராகுல் மற்றும் அவரது நண்பர் பிரகாஷ் ஆகிய 4 பேரும் நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






