கள்ளக்காதலியை திருமணம் செய்ய முயன்ற கணவன் - இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

கோப்புப்படம்
கணவர் கள்ளக்காதலியை திருமணம் செய்யப்போவதை அறிந்த கீதா வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
திருவாரூர் மாவட்டம் தில்லைவிளாகத்தை அடுத்துள்ள எடையூர் சங்கேந்தி கர்ணகொடை கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மகள் கீதா (28 வயது). இவரும், வடசங்கந்தி கிராமத்தை சேர்ந்த சங்கர் மகன் சரண்ராஜ் (33 வயது) என்பவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவர் சரண்ராஜிக்கு, வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை மனைவி கீதா கண்டித்துள்ளார். இதனால் கணவர், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக கீதா கணவரிடம் கோபித்து கொண்டு கடந்த 1 ஆண்டாக தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கணவர் சரண்ராஜ், கள்ளக்காதலியை இரண்டாவதாக திருமணம் செய்யப்போவதாக கீதாவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலை அறிந்து மன உளைச்சலில் இருந்த கீதா வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கீதா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் எடையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் கள்ளக்காதலியை இரண்டாவதாக திருமணம் செய்ய முயன்றதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






