குடிபோதையில் சென்று தகராறு செய்த கணவர்.. பெண் செய்த செயலால் அதிர்ச்சி

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடிபோதையில் சென்று தகராறு செய்த கணவர்.. பெண் செய்த செயலால் அதிர்ச்சி
Published on

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அடுத்த ஜம்போடை கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 43), கார் டிரைவர். இவருக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மணிமங்கலம் கிராமத்தை சேர்ந்த துர்கா (30) என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக துர்கா கணவனை பிரிந்து மணிமங்கலம் கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்று தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில், பச்சையப்பன் நேற்று முன்தினம் இரவு தனது மனைவியை பார்ப்பதற்காக மணிமங்கலத்திற்கு குடிபோதையில் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு பச்சையப்பனுக்கும், துர்காவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த துர்கா, பச்சையப்பனின் கழுத்தில் துண்டை போட்டு சுற்றி வீட்டிற்குள் இருந்து தரதரவென வெளியே இழுத்து வந்து தள்ளி உள்ளார். இதில் கழுத்தை துண்டு இறுக்கியதில் பச்சையப்பன் அதே இடத்தில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

உடனே துர்கா, மங்கலம் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பச்சையப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து துர்காவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com