தங்கத்தை போல்ட், நட்டுகளாக மாற்றி நூதன கடத்தல் முயற்சி - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

தங்கம் என்பது தெரியாமல் இருக்க போல்ட், நட்டு மீது சாம்பல் நிற பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது.
தங்கத்தை போல்ட், நட்டுகளாக மாற்றி நூதன கடத்தல் முயற்சி - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
Published on

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த 30 வயது பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அவரது உடைமைகளையும் சோதித்தனர். அதில் மொத்தம் 99 தங்கத்திலான போல்ட், நட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

மேலும் அவை தங்கம் என்பது தெரியாமல் இருக்க போல்ட், நட்டு மீது சாம்பல் நிற பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது. அவரிடம் இருந்து சுமார் 900 கிராம எடைகொண்ட 99 தங்க போல்ட், நட்டுகளை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.85 லட்சம் ஆகும்.

இந்த தங்கத்தை நூதன முறையில் மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த பயணியை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com