நோய்களின் தொட்டிலாக தமிழகம் மாறிவருவது மிகக் கொடுமையானது - நயினார் நாகேந்திரன்


நோய்களின் தொட்டிலாக தமிழகம் மாறிவருவது மிகக் கொடுமையானது -  நயினார் நாகேந்திரன்
x

கோப்புப்படம்

பொற்கால ஆட்சி என வெற்றுப் பெருமை பேச அறிவாலயம் அரசு வெட்கப்பட வேண்டும் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது, மத்திய அரசால் வெளியிடப்பட்ட தூய்மை நகரங்கள் பட்டியலில் தேசிய அளவில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட 40 நகரங்களின் தரவரிசையில் தமிழகத்தின் தலைநகர் சென்னை 38-வது இடத்தையும், மதுரை 40-வது இடத்தையும் பெற்றிருப்பது மிகுந்த கவலையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

தமிழகத்தின் ஒரு நகரம் கூட தூய்மை நகரங்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் வராத நிலையில், வருடா வருடம் தூய்மைப்பணிகளுக்காக பல்லாயிரக்கணக்கான கோடிகளை செலவிடுவதாக திராவிட மாடல் அரசு காட்டிய கணக்குகள் எல்லாம் என்ன ஆனது?. தமிழகத்தில் பெருகி வரும் குற்றங்களைத் தான் தி.மு.க அரசால் கட்டுப்படுத்த முடியாது என்றால், பெருகிவரும் குப்பைகளைக் கூட தடுக்க இயலாதா?.

தரம் குன்றி வரும் அரசு மருத்துவமனைகள், குப்பைகளின் கூடாரமாகி வரும் மாநகரங்கள், பராமரிப்பு என்ற பெயரில் நடக்கும் ஊழல் முறைகேடுகள், அவற்றைக் கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள் என திராவிட மாடல் அரசின் திறனற்ற நிர்வாகத்தால் நோய்களின் தொட்டிலாக தமிழகம் மாறிவருவது மிகக் கொடுமையானது.

குப்பைக்காடாக தமிழகத்தை மாற்றிவிட்டு, நாடு போற்றும் நல்லாட்சி என்று இனியொரு முறை கூறுவதற்கு தி.மு.க-வின் தலைவர்கள் கூனிக் குறுக வேண்டும். குப்பைகளைப் பெருகவிட்டு, நோய்களின் கூடாரமாகத் தமிழகத்தை மாற்றிவிட்டு மேடைதோறும் பொற்கால ஆட்சி என வெற்றுப் பெருமை பேச அறிவாலயம் அரசு வெட்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 More update

Next Story