கரூர் சம்பவம்: மக்களின் சந்தேகத்திற்குக் கூடிய விரைவில் விடை கிடைக்கப் போகிறது - நயினார் நாகேந்திரன்


கரூர் சம்பவம்: மக்களின் சந்தேகத்திற்குக் கூடிய விரைவில் விடை கிடைக்கப் போகிறது - நயினார் நாகேந்திரன்
x

கோப்புப்படம் 

அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்காக அப்பாவிப் பொதுமக்களைக் காவு வாங்கிய கயவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

சென்னை

கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் சிபிஐ விசாரணைக்கு வரவேற்பு தெரிவித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:-

அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்! கடந்த சில தினங்களுக்கு முன்பு 41 பேரைக் காவு வாங்கிய கரூர் துயரத்தின் பின்னணியை சிபிஐ தான் விசாரிக்க வேண்டுமென்ற நமது வலுவான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் வகையில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் கண்காணிப்பு குழுவையும் அமைத்துள்ள நமது சுப்ரீம் கோர்ட்டுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கரூர் சம்பவத்தில் தங்கள் மீது எந்தவிதத் தவறும் இல்லை என்பதை நிறுவ, எதிர்தரப்பினரைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தி தங்கள் இஷ்டத்திற்குக் கட்டுக்கதைகளைப் புனைந்து வந்த திமுக அரசின் அவசரத்திற்குப் பின்னால் ஏதோவொரு அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது என்ற மக்களின் சந்தேகத்திற்குக் கூடிய விரைவில் விடை கிடைக்கப் போகிறது. தங்களின் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்காக அப்பாவிப் பொதுமக்களைக் காவு வாங்கிய கயவர்கள் கருணையின்றி தண்டிக்கப்படுவார்கள்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story