கவின் ஆணவப்படுகொலை வழக்கு: கைதான சப்-இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனு தள்ளுபடி

கைதான சப்-இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
கவின் ஆணவப்படுகொலை வழக்கு: கைதான சப்-இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனு தள்ளுபடி
Published on

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கவின் என்பவர் கடந்த ஜூலை மாதம் ஆணவப்படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த சுர்ஜித், அவரது தந்தையும், சப்-இன்ஸ்பெக்டருமான சரவணன் ஆகியோர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் இந்த சம்பவம் நடந்த அன்று ராஜபாளையத்தில் பணியில் இருந்தேன். சுர்ஜித் எனது மகன் என்பதை தவிர எனக்கும், அந்த கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனது உடல் நலத்தை கருத்தில் கொண்டு எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, கவின் கொலை சம்பவத்தின்போது மனுதாரர் விடுமுறையில் இருந்துள்ளார். எனவே இந்த கொலை சம்பவத்துக்கும், மனுதாரருக்கும் தொடர்பு உள்ளது என்று சி.பி.சி.ஐ.டி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி முரளிசங்கர் நேற்று பிறப்பித்தார். அப்போது, கவின் கொலை வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதால் மனுதாரரின் ஜாமீன் கோரிக்கை ஏற்புடையதல்ல. எனவே அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com