காதலனின் தந்தைக்கு அரிவாளால் வெட்டு.. பெண்ணின் தந்தை வெறிச்செயல்

காதல் விவகாரம் பெண்ணின் தந்தைக்கு தெரிய வர, காதலை கைவிடும்படி அந்த வாலிபரிடம் கூறியதாக கூறப்படுகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மகன் சஞ்செய். இவர் மேட்டுபாளையம் பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவரது மகளான கார்த்திகா என்பவரை காதலித்து வந்துள்ளார். சுதாகருக்கு இந்த காதல் விவகாரம் தெரிய வர காதலை கைவிடும்படி சஞ்ஜெயிடம் சுதாகர் கூறி இருந்துள்ளார்.
இந்நிலையில் காதலை சஞ்ஜெய் கைவிடாததால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் தந்தை சுதாகர் நேற்று உதயேந்திரம் பகுதியில் சஞ்ஜெயை கொலை செய்ய அவரது வீட்டிற்கு சென்றார். அங்கே சஞ்ஜெய் இல்லாததால், சஞ்ஜெயின் தந்தையான கார்த்திகை அரிவாளால் முகம், கை,கால்களில் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த கார்த்திக் என்பவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிராமிய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு, தலைமறைவாக உள்ள சுதாகரை தேடி வருகின்றனர். மேலும் சுதாகர் ஏற்கனவே 2011-ம் ஆண்டு திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கமலக்கண்ணனை கொலை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.






