கரூரில் பலர் உயிரிழப்புக்கு மூச்சுத்திணறலே காரணம்; மருத்துவ கல்வி இயக்குனர் தகவல்

கரூரில் தவெக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர்.
கரூர்,
தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்குனர் ராஜகுமாரி கரூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கரூர் வேலுசாமிபுரம் சம்பவத்தில் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. கரூர் அரசு ஆஸ்பத்திரியை பொறுத்தவரை மொத்தம் 52 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 2 பேர் நிலைமை மட்டுமே கவலைக்கிடமாக உள்ளது. மற்றவர்கள் அனைவரும் நன்றாக இருக்கிறார்கள். உடற்கூராய்வு அறிக்கையில் பெரும்பாலானவர்கள் இறப்பிற்கு காரணம் மூச்சுத்திணறல் என உறுதியாகி உள்ளது.
உடற்கூறு ஆய்வுக்காக மட்டும் 16 டாக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கரூர் அரசு ஆஸ்பத்திரியில் மொத்தம் 60 முதல் 70 டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுதவிர சேலம், ஈரோடு, மதுரை ஆகிய இடங்களில் இருந்தும் மருத்துவ நிபுணர்கள் வந்துள்ளனர். அவர்களும் இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுதவிர கரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் 31 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.






