எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகத் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் முத்துராமலிங்கத் தேவர் - விஜய் புகழாரம்

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தவெக அலுவலகத்தில் முத்துராமலிங்கத் தேவர் படத்துக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக விழாவாக தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று அரசியல் விழாவாக நடந்தது.
பசும்பொன்னில் இன்று தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை அரசு விழாவாக நடைபெற்று வருகிறது. தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பனையூரில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் முத்துராமலிங்கத் தேவரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் விஜய் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர், ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகத் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர், அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குரு பூஜை தினத்தில், எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






