தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு புறப்படும் வடமாநில தொழிலாளர்கள் - சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்


தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு புறப்படும் வடமாநில தொழிலாளர்கள் - சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்
x
தினத்தந்தி 15 Oct 2025 10:05 PM IST (Updated: 16 Oct 2025 4:59 PM IST)
t-max-icont-min-icon

சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்லும் வடமாநில தொழிலாளர்களால் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது.

சென்னை,

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 20-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர். தீபாவளிக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில், வெளியூர்களில் வேலை செய்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்படுவதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில், சென்னையில் தங்கி வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். சென்னை முழுவதும் இந்தியாவின் வட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கட்டிட வேலை, ஓட்டல், டீக்கடை உள்பட பல்வேறு வேலைகளை செய்து வருகின்றனர். அவர்கள் தற்போது தீபாவளியை தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாட சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.

இந்த நிலையில், சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்லும் வடமாநில தொழிலாளர்களால் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. ஹவுரா செல்லும் விரைவு ரெயிலில் ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்கள் போட்டிப்போட்டு இடங்களை பிடித்தனர். இதனிடையே ரெயில் பெட்டிகளில் பட்டாசுகள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்டறிய தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிக்கும் வடமாநில நபர்கள் வரிசையாக அணிவகுத்து செல்வதை உறுதி செய்ய பலத்த பாதுகாப்பு பணிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

1 More update

Next Story