செல்போனில் விளையாடியதை கண்டித்த பெற்றோர்: 7-ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு

கோப்புப்படம்
சிறுவன் செல்போனில் அடிக்கடி ‘கேம்’ விளையாடியதை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
சேலம் அருகே உள்ள திருமலைகிரி தோப்புக்காட்டை சேர்ந்தவர் வெங்கடேஷ், கூலித்தொழிலாளி. இவருடைய மகன் தீனா (11 வயது). சிறுவன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று காலை தீனா வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருந்தான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சிறுவனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில் ஏற்கனவே தீனா இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் வந்த போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.
அதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், தீனா வீட்டில் செல்போனில் அடிக்கடி ‘கேம்’ விளையாடி உள்ளான். இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த தீனா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






