விபத்தில் இறந்தவரின் வாரிசுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு தொகை: அஞ்சல் துறை வழங்கல்

தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு மெக்கானிக்கிற்கு, அவர் வேலை செய்த நிறுவனம் சார்பில் இந்திய அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் விபத்து காப்பீடு செய்திருந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் ஜெயக்குமார் டிரான்ஸ்போர்ட்ஸில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். இவருக்கு இந்த நிறுவனத்தின் சார்பாக இந்திய அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் ரூ.559 செலுத்தி விபத்து காப்பீடு செய்திருந்தனர். இந்த நிலையில் அவர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது வாரிசான அவரது மனைவி ஜெயராணிக்கு தூத்துக்குடி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் வதக் ரவிராஜ் ஹரிஷ்சந்திரா விபத்து காப்பீட்டுத் தொகையான ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
பின்னர் அவர், "இந்திய அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் ஆண்டிற்கு ரூ.549 மற்றும் ரூ.799 செலுத்தி அஞ்சல் துறை மூலம் எளிய மக்கள் பயன் பெறும் வகையில் ரூ.10 மற்றும் ரூ.15 லட்சத்திற்கான விபத்துக் காப்பீடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஜெயக்குமார் டிரான்ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் வரதராஜ், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மற்றும் அஞ்சல் துறையை சேர்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.






