வந்த நேரம் சரியில்லை எனக்கூறி பிரச்சினை... திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

கோப்புப்படம்
திருமணமான 3 மாதத்தில் விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள மணியார்பாளையம் கீழாத்துக்குளி கிராமத்தை சேர்ந்தவர் கலியன் மகள் மோனேஸ்வரி (19 வயது). இவருக்கும் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் நவீன்குமார் என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் மோனேஸ்வரியின் மாமியார், ராஜாம்பாள் கடந்த 1 மாதத்திற்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இதனால் நவீன்குமாரின் குடும்பத்தினர் மோனேஸ்வரி வந்த நேரம் சரியில்லை எனக்கூறி பிரச்சினை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கலியன் தனது மகள் மோனேஸ்வரியை கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்.
இருப்பினும் மனவேதனையில் இருந்த மோனேஸ்வரி, சம்பவத்தன்று ஈச்சங்காட்டில் உள்ள காட்டுக்கொட்டாயில் விஷம் குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். இதைபார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி மோனேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் கரியாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






