சொத்து தகராறு: அக்கா உட்பட 3 பேரை கத்தியால் குத்திய வாலிபர் - அடுத்து நடந்த அதிர்ச்சி


சொத்து தகராறு: அக்கா உட்பட 3 பேரை கத்தியால் குத்திய வாலிபர் - அடுத்து நடந்த அதிர்ச்சி
x

கோப்புப்படம் 

பூர்வீக சொத்துகளை பிரிக்கும்போது அக்காவுக்கு கூடுதல் பணம் கொடுத்ததால் அக்கா, தம்பி இடையே சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது.

சேலம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தென்னங்குடி பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் காமராஜ். இவருடைய மகன் ராம்பிரபு (37 வயது). இவர் தலைவாசல் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கேண்டீன் நடத்தி வந்தார். இவரது அக்கா முகந்தி, திருமணமாகி கணவருடன் வீரகனூரில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் ராம்பிரபுவின் தந்தை காமராஜ் தனது பூர்வீக சொத்துகளை பிரிக்கும்போது அவரது மகள் முகந்திக்கு கூடுதலாக பணம் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அக்கா, தம்பிக்கு இடையே சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ராம்பிரபு ஆத்திரத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் மாலை வீரகனூர் சென்ற ராம்பிரபு அவரது அக்காவிடம் தகராறு செய்தார். அப்போது அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ராம்பிரபு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அக்காவின் வயிற்றில் குத்திவிட்டு தப்பி ஓட்டம் பிடித்தார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தொடர்ந்து முகந்தியின் உறவினர்களான சக்திவேல் (38 வயது), முத்துக்குமார் (43 வயது), கோபிநாத் (29 வயது) ஆகிய 3 பேரும் ராம்பிரபுவை செல்போனில் தொடர்பு கொண்டு ஏன் உனது அக்காவை கத்தியால் குத்தினாய்? என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் அவர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும், உங்களுக்கு தைரியம் இருந்தால் நேரில் வாருங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவர்கள் 3 பேரும் ஒரு காரில் ராம்பிரபுவை தேடி ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரத்திற்கு நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு சென்றனர். அப்போது அவர்களுடன் ராம்பிரபு வாக்குவாதம் செய்ததுடன் கத்தியால் கோபிநாத்தை வயிற்றில் குத்தினார். இதை தடுக்க சென்ற சக்திவேலுக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் அவர்கள் இருவரும் காயம் அடைந்தனர். அப்போது அவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர்.

இதையடுத்து அவர்களிடம் சிக்காமல் இருக்க ராம்பிரபு தப்பி ஓட்டம் பிடித்தார். அப்போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராம்பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கத்திக்குத்தில் காயம் அடைந்த கோபிநாத், சக்திவேல் ஆகியோர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து தகராறில் அக்கா உள்பட 3 பேரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய வாலிபர் அரசு பேருந்தில் அடிபட்டு இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story