கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் - ஜல்லி, எம் சாண்டிற்கு ரூ.1000 உயர்வு

உரிமையாளர்களிடம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
சென்னை,
கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சமீபத்தில் விதிக்கப்பட்ட சிறு கனிம நிலவரி மற்றும் ராயல்டி உயர்வு உள்ளிட்ட 24 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இந்த சங்கத்தினருடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டது. வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சரை கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்கத்தினர் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக சந்தித்தனர். கல்குவாரிகளுக்கு வழங்கப்படும் உரிமங்களுக்கான கால நீட்டிப்பு மற்றும் குவாரிகள் ஒருங்கிணைப்பு தொடர்பான அரசாணைகள் வெளியிடப்பட உள்ளன,
நிலத்தடி நீர்மட்டம் வரை குவாரி செய்வது, ஓராண்டில் உச்ச உற்பத்தி செய்வது, இரண்டாவது முறையாக மாவட்ட கலெக்டரின் தடையில்லா சான்று தேவையில்லை போன்றவற்றை பரிசீலித்து முடிவு செய்திட மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உறுதி செய்துள்ளது. இதர கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சங்கத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் சங்கத்தினர் அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் துரைமுருகனுடன் பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் சங்கத்தினர் அளித்த பேட்டியில், 'கனிம வரி உயர்வுக்கு ஏற்ப பொருட்கள் விலையை ஏற்றி கொள்ளலாம் என்று அமைச்சரும், அதிகாரிகளும் அனுமதி கொடுத்து உள்ளனர். எனவே இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஒரு யூனிட் ஜல்லி ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், எம் சாண்ட் ரூ.6 ஆயிரமாகவும், பி சாண்ட் ரூ.7 ஆயிரமாகவும் விலை உயரும்' என்றார்.






