தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி - காங்கிரஸ் அறிவிப்பு

காங்கிரஸ் கட்சியின் கிராம கமிட்டி மாநில மாநாட்டில் ராகுல் காந்தி பங்கேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை,
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும் என்று தெரிகிறது. அதாவது, திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் மற்றொரு அணியும், நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் இன்னொரு அணியும், சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண இருக்கின்றன.
சட்டசபை தேர்தலையொட்டி மக்களை சந்திப்பதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நடைபயணம் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் 2026 சட்டசபை தேர்தலுக்காக அடுத்த மாதம் தமிழ்நாட்டுக்கு வருகை தர உள்ளார். ராகுல்காந்தி பங்கேற்கும் கிராம கமிட்டி மாநில மாநாட்டையும் பிரியங்கா காந்தியின் பேரணியையும் ஒருங்கிணைக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாடு முழுவதும் பங்கேற்கும் கிராம கமிட்டி மாநில மாநாட்டை ஒருங்கிணைப்பதற்காக கீழ்கண்ட குழுக்களுக்கு தலைவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
நிதிக்குழு கே.வீ. தங்கபாலு
வாகன வசதி ஏற்பாட்டுக்குழு சு. திருநாவுக்கரசர்
வரவேற்புக்குழு எம். கிருஷ்ணசாமி
விளம்பரக்குழு கே.எஸ். அழகிரி
பிரச்சாரம் மற்றும் அணி திரட்டல் குழு சா. பீட்டர் அல்போன்ஸ்
மாநாட்டு திடல் அமைப்பு, தங்குமிடம் ரூபி ஆர். மனோகரன், எம்.எல்.ஏ., மற்றும் உபசரிப்புக்குழு
மேலும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி அவர்கள் கலந்துகொள்ளும் மகளிர் பேரணி சிறப்பாக நடத்திட கீழ்கண்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவிக்கப்படுகிறது.
செல்வி எஸ். ஜோதிமணி, எம்.பி.
செல்வி. சுதா ராமகிருஷ்ணன், எம்.பி.
திருமதி. கே. ராணி, முன்னாள் எம்.பி.
திருமதி. ஹசீனா சையத், தலைவர், மகிளா காங்கிரஸ் - உறுப்பினர்
திருமதி. தாரகை கத்பர்ட், எம்.எல்.ஏ. - உறுப்பினர்
திருமதி. ராணி வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






