தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,
மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், கிழக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் கிழக்கு - வடகிழக்கு திசையில் வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் வழியாக தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு மராட்டிய கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறையக்கூடும்.
தெற்கு மியான்மர் கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும்.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது
என தெரிவிக்கப்பட்டுள்ளது.






