பண்டிகை நாட்களை முன்னிட்டு கரூர் வழியாக சிறப்பு ரெயில் இயக்கம்

கரூர் வழியாக மைசூரு-ராமநாதபுரம் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
கரூர்,
தெற்கு ரெயில்வே சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தொடர்ந்து பண்டிகை நாட்கள் வர உள்ளதால் பயணிகளின் வசதிக்காக கடந்த 15-ந் தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 28-ந் தேதி வரை மைசூரு முதல் ராமநாதபுரம் வரை வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அந்தவகையில் மைசூரு - ராமநாதபுரம் சிறப்பு ரெயிலானது (வண்டி எண்: 06237) கடந்த 15-ந் தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந் தேதி வரை வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் இயக்கப்பட உள்ளது.
அதன்படி இந்த ரெயிலானது திங்கட்கிழமை மாலை 6.35 மணிக்கு மைசூருவில் இருந்து புறப்பட்டு வரும். இந்த ரெயிலானது அடுத்த நாள் (செவ்வாய்க்கிழமை) காலை 5.18 மணிக்கு கரூர் ரெயில் நிலையத்திற்கு வந்து சேரும். தொடர்ந்து இந்த ரெயில் கரூரில் இருந்து காலை 5.20 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரெயில் திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, பரமக்குடி வழியாக செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு ராமநாதபுரத்தை சென்றடையும்.
இதேபோல மறுமார்க்கத்தில் ராமநாதபுரம் - மைசூரு சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06238) வருகிற 16-ந் தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 28-ந் தேதி வரை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயிலானது செவ்வாய்க்கிழமை மதியம் 3.10 மணிக்கு ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு வரும். இந்த ரெயில் இரவு 8.08 மணிக்கு கரூரை வந்தடையும். தொடர்ந்து இந்த ரெயில் கரூர் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரெயிலானது நாமக்கல், சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூரு கண்டோன்மெண்ட், கே.எஸ்.ஆர். பெங்களூரு வழியாக மறுநாள் (புதன்கிழமை) காலை 7.45 மணிக்கு மைசூரை சென்றடையும்.






