தமிழ்நாடு அரசின் புத்தொழில் ஆதார நிதித் திட்டம்: 8 ஆம் பதிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

டான்சீட் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 169 புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதார நிதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாடு அரசின் புத்தொழில் ஆதார நிதித் திட்டத்தின் 8 ஆம் பதிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதியின் (டான்சீட் – TANSEED) 8 ஆம் பதிப்பிற்கான விண்ணப்பங்களை பெறத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசின் டான்சீட் (TANSEED) திட்டமானது, தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவும் விதமாக தொடங்கப்பட்டு இதுவரை ஏழு பதிப்புகள் நடைபெற்றுள்ளன. தற்போது 8 ஆம் பதிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டான்சீட் திட்டம் 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 169 புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதார நிதி வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் வழியாக பசுமைத் தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு மற்றும் பெண்களை முதன்மை பங்குதாரர்களாகக் கொண்ட புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சமும், இதர துறை சார்ந்த புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படும்.
மேலும், இத்திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு ஓராண்டு கால தொழில் வளர்ப் பயிற்சி, தொழில்முனைவு வழிகாட்டுதல்கள், தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான புத்தொழில் நிகழ்வுகளில் பங்கேற்க முன்னுரிமை ஆகிய ஆதரவுகளும் வழங்கப்படும். இதன் பொருட்டு தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், உதவி பெறும் புத்தொழில் நிறுவனங்களிடமிருந்து 3 சதவீத பங்குகளை ஆதரவுக்கான பங்காகப் பெற்றுக்கொள்ளும்.
புத்தாக்க சிந்தனையுடன் செயல்படக்கூடிய, வருங்காலங்களில் அதிகளவு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தொழில் மாதிரிகளைக் கொண்ட, சமூகத்தில் நன்மாற்றங்களை விளைவிக்கும் வகையில் செயல்படக்கூடிய புத்தொழில் நிறுவனங்கள் யாவும் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் தமிழ்நாட்டினை தலைமையகமாகக் கொண்டிருக்க வேண்டும். மேலும், மத்திய அரசின் டி.பி.ஐ.ஐ.டி (DPIIT) தளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் நிறுவனமானது முன்பே செயல்பட்டு வந்த பிறிதொரு நிறுவனத்தில் இருந்து பிரிந்து வந்ததாகவோ அல்லது வேறு ஒரு நிறுவனத்தின் கூட்டு அல்லது இணை நிறுவனமாகவோ இருத்தல் கூடாது. மேலும், எந்த ஒரு அரசு நிறுவனத்தாலும் தடைசெய்யப்பட்ட பட்டியலில் இடம்பெற்றிருக்கக் கூடாது.
இந்தத் திட்டத்தின் முந்தைய பதிப்புகளில் பயன்பெற்ற நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களை வெற்றிகரமாக அடுத்த தளத்திற்கு கொண்டு சென்று, பல்வேறு முதலீட்டு நிதியங்களின் வாயிலாக முதலீடுகளை திரட்டி இயங்கி வருகின்றன. இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெற விரும்பும் புத்தொழில் நிறுவனங்கள் www.startuptn.in இணையதளத்தின் வழியே டிசம்பர் 6, 2025 முதல் டிசம்பர் 20, 2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் டிசம்பர் 20, 2025 ஆகும். மேலும் தகவல்களை அறியவோ அல்லது ஏதேனும் வினாக்கள் இருந்தாலோ tanseed@startuptn.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






