நாம் சந்திக்கக்கூடிய தேர்தல் களம் சூழ்ச்சி நிறைந்தது - கனிமொழி எம்.பி.

மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னுதாரணமாக இருந்து வருகிறது என்று கனிமொழி கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட தி.மு.க. சார்பில் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், மண்டல தேர்தல் பொறுப்பாளருமான கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கல்வித்துறையில் பல்வேறு சாதனைகளை தமிழகம் செய்துள்ளது. இதனை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மக்கள் நலத் திட்டங்களை திறன்பட செயல்படுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னுதாரணமாக இருந்து வருகிறது.
பேரிடர் நிவாரண தொகை, கல்வித்தொகை, தமிழகத்திற்கு வர வேண்டிய நிதி உள்ளிட்டவற்றை கொடுக்காமல் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. திராவிட மாடல் ஆட்சி என்பது அனைவருக்கும் சம உரிமை ஆகும். நான்கு ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமியை காணவில்லை. தற்போது முதல்-அமைச்சரை கேள்வி கேட்பது ஏன்? பாஜக விடுக்கும் கட்டளைகளை எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி வருகிறார்.
பாஜக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியா? அல்லது தேர்தல் ஆணையம் மூலம் ஆட்சி அமைத்துள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பல மாநிலங்களில் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நடந்து முடிந்த அரியானா, மராட்டியம், கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் குளறுபடிகள் நடந்துள்ளன.
நாம் சந்திக்கக்கூடிய தேர்தல் களம் சூழ்ச்சி நிறைந்த களம். வாக்காளர் பட்டியலை அனைவரும் மிக மிக கவனத்துடன் சரி பார்க்க வேண்டும். புதிதாக சேர்க்கும் பட்டியல் நியாயமானதா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும். எதிர்கால சந்ததியினாின் சுயமரியாதையை நிலை நாட்ட திமுகவை மீண்டும் வெற்றி பெற செய்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






