பஸ் நிற்கவில்லை என்று பரவும் செய்தி தவறானது: அமைச்சர் சிவசங்கர்


பஸ் நிற்கவில்லை என்று பரவும் செய்தி தவறானது: அமைச்சர் சிவசங்கர்
x

கல்லூரி முன்பாக பஸ் நிற்கவில்லை என்று பரவும் செய்தி தவறானது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கடந்த 22ம் தேதி சிவகங்கை மாவட்டத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்தபோது, சிவகங்கை- திருப்பத்துார் தேசிய நெடுஞ்சாலையில் சோழபுரம் புனித ஜஸ்டின் கலை மற்றும் மகளிர் அறிவியல் கல்லூரி மற்றும் சாந்தா கல்வியியல் கல்லூரி முன்பாக பஸ்கள் நின்று செல்ல வேண்டும் என கல்லூரி முதல்வர், முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையினை பரிசீலனை செய்த முதல்-அமைச்சர் உடனடியாக அந்த கல்லூரி முன்பாக பஸ்கள் நின்று செல்ல உத்திரவிட்டார்.

ஆனால் கல்லூரி முன்பு பஸ்கள் நின்று செல்லவில்லை என்றும் முதல்-அமைச்சரின் உத்தரவை பின்பற்றப்படவில்லை என்றும் செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுதொடர்பாக அமைச்சர் சிவசங்கர் கூறுகையில்,

இந்த செய்தியை தொடர்ந்து, உடனடியாக காரைக்குடி துணை மேலாளர் (வணிகம்) பஸ் நிறுத்தத்திற்குச் சென்று ஆய்வு செய்ததுடன், கல்லூரி முதல்வரிடம் சென்று பஸ் நின்று செல்வதை உறுதி செய்தார்.

மேலும், துணை மேலாளரிடம் கல்லூரி முதல்வர், முதல்-அமைச்சருக்கும் எனக்கும் நன்றி தெரிவித்து பாராட்டுச்செய்தி கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார். அந்த கடிதத்தில் பஸ்கள் நின்று செல்கின்றன என்றும், சமூக வலைத்தளங்களில் தவறான செய்தி பதிவிடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த கல்லூரி முன்பாக பஸ் நிறுத்தம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே, சமூக வலைத்தளங்களில் வரும் செய்தி முற்றிலும் தவறானது, உண்மைக்கு புறம்பானது என்றார்.

1 More update

Next Story