திருச்செந்தூரில் திடீரென 80 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்

கடலுக்குள் இருக்கும் பாசிபடிந்த பாறைகள் வெளியே தென்பட்டன.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திகழ்கிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதற்கிடையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதார பதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி மற்றும் நவமி திதி நாட்களில் காலையில் உள் வாங்குவதும், மாலையில் இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடந்து வருகிறது.
அந்த வகையில், இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடல் சுமார் 80 அடி உள்வாங்கியுள்ளது. இதனால், கடலுக்குள் இருக்கும் பாசிபடிந்த பாறைகள் மற்றும் சிறிய அளவிலான கடல்வாழ் உயிரினங்கள் வெளியே தென்பட்டன. அவற்றை பக்தர்கள் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.






