தேனி வெள்ள பாதிப்பு: தேவையான நிவாரண உதவிகளை அரசு வழங்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

கோப்புப்படம்
தேனி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை உடனடியாக சரிசெய்து, நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
பருவமழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கினால் மக்கள் பாதிப்பு அடையாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதும், எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படுகின்றன என்பதைக் கண்காணித்து அதற்கு நிவாரணம் காண்பதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதும் மாநில அரசின் தலையாய கடமைகள் ஆகும்.
வடகிழக்கு பருவமழை என்பது தமிழ்நாட்டில் அதிகம் பெய்யக்கூடிய ஒன்று என்பது நன்கு தெரிந்திருந்தும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுக்காததன் காரணமாக நேற்று பெய்த அதிகனமழையில் தேனி மாவட்ட மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை என்பது அக்டோபர் மாதம் 15-ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 31-ம் வரை நிலவுகின்ற ஒன்று என்பதும், இந்தக் காலகட்டத்தில் பல கட்டங்களாக மழைப் பொழிவு இருக்கும் என்பதும் எல்லோரும் அறிந்த ஒன்றாகும். கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் மழை விட்டுவிட்டு பெய்து வந்த நிலையில், நேற்று மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் நேற்று மழைக் கொட்டித் தீர்த்துள்ளது. 32 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற அதிகனமழை தேனி மாவட்டத்தில் பெய்துள்ளது. கம்பம், கூடலூர், உத்தமபாளையம், சின்னமனூர், உப்புக்கோட்டை, குள்ளப்பகவுண்டன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல் சாகுபடி முடிவடைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நெல் வயல்கள் இந்த மழையால் சேதமடைந்துள்ளன. கம்பம்-கருவிபட்டி சாலையில் முல்லைப் பெரியாறில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாலம் துண்டிக்கப்பட்டுள்ளது. பதினெட்டாம் கால்வாய், ஏகலூத்து ஓடைப் பகுதியில் இருந்து வந்த காட்டாற்று வெள்ளம் காரணமாக கம்பம் மெட்டு காலனியில் உள்ள குடியிருப்புகள் மழைநீரால் சூழ்ந்துள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தத்தளிக்கின்றனர். கோம்பை, பண்ணைப்புரம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
விளை நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தேமடைந்துள்ளன. உத்தமபாளையம் ஞானாம்பிகை கோவில் அருகே ஒரு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த தேங்காய்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், கூடலூரில் தனியார் பள்ளி சுற்றுச் சுவர் இடிந்து விழுந்துவிட்டதாகவும், சிறுபுனல் மின் நிலையத்தில் சுற்றுச்சுவர் உடைந்ததன் காரணமாக தண்ணீர் உள்ளே புகுந்து மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கான கோழிகள், நூற்றுக்கணக்கான கால்நடைகள் பலியாகி உள்ளன. மொத்தத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், நிவாரண நடவடிக்கைகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை.
முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, அரசு அதிகாரிகளை உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி, அந்த மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கவும்; சேதமடைந்த பயிர்கள், கோழிகள் மற்றும் கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






