‘தேர்தலில் பெரும் யுத்தத்தை சந்திக்க வேண்டிய சூழல் நிலவுகிறது’ - கவிஞர் சினேகன்

பருவமழை முன்னெச்சரிக்கையாக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது என சினேகன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி,
திரைப்பட பாடலாசிரியரும், மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகியுமான கவிஞர் சினேகன், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு, பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் கவிஞர் சினேகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. சென்னையில் நான் இருக்கும் பகுதியில் ஏற்கனவே தொடங்கப்பட்ட பணிகள் 80 சதவீதம் முடிந்துவிட்டன.
மேலும் மீதம் உள்ள பணிகளை பெருமழை வருவதற்கு முன்பாக நிறைவு செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் இத்தனை வருடங்களாக வந்த தேர்தல்களை விட, எதிர்வரும் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருவதை பார்க்கும்போது, சட்டமன்றத் தேர்தலில் அனைத்து கட்சிகளும் பெரும் யுத்தத்தை சந்திக்க வேண்டிய சூழல் நிலவுவதாக தெரிகிறது” என்று தெரிவித்தார்.






