தூத்துக்குடி: மின்னல் தாக்கி வாலிபர் உயிரிழப்பு- 3 பெண்கள் படுகாயம்

விளாத்திகுளம் அருகே உள்ள வி.சுப்பையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் அவருடைய விவசாய நிலத்தில் 8 பேருடன் சேர்ந்து மிளகாய், வெங்காயப் பயிர்கள் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வி.சுப்பையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசகம் மகன் குருமூர்த்தி (வயது 35), தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த விவசாய பணியாளர்கள் 8 பேருடன் சேர்ந்து மிளகாய் மற்றும் வெங்காயப் பயிர்கள் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது பெய்த கனமழையின் போது ஏற்பட்ட மின்னல் தாக்கியதில் குருமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த விவசாய பணியாளர்கள் கனகா, வசந்தா, சென்னக்காள் ஆகிய மூன்று பெண்களும் படுகாயம் அடைந்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காடல்குடி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மின்னல் தாக்கி உயிரிழந்த குருமூர்த்தியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்கி விவசாயி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






