இன்று ஒரு நாள் மட்டும் 45.64 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் வீட்டு வாசலில் சேகரிக்கப்பட்டு அகற்றம் - சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும், பழைய சோபாக்கள், மெத்தைகளை வீட்டு வாசலில் சேகரிக்கும் சேவை இன்று நடைபெற்றது.
சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாள்தோறும் சராசரியாக 6,500 மெட்ரிக் டன் திடக்கழிவுகளும், 1,000 மெட்ரிக்டன் கட்டடம் மற்றும் கட்டுமான இடுப்பாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது.
மேலும் மாநகரினை சுத்தமாக வைத்திடும் வகையில் சாலைகள், தெருக்கள், பேருந்து நிறுத்தங்கள், பூங்காக்கள், பாலங்கள் மயான பூமிகள் உள்ளிட்ட பொது இடங்களில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தீவிர தூய்மைப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் பொதுமக்கள் குப்பைகள் மட்டுமல்லாது, தங்களது வீட்டில் உள்ள பழைய சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகளை பொது இடங்களில் கொட்டுவதைத் தவிர்த்திடும் விதமாகவும், மக்களுக்கு இதன் காரணமாக ஏற்படும் இடையூறு மற்றும் சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படுவதைத் தவிர்த்திடும் விதமாகவும், தமிழ்நாட்டில் முதல் முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பொதுமக்கள் முன்கூட்டிய தரும் தகவலின் அடிப்படையில், அவர்களின் வீடுகளிலிருந்து பழைய சோபாக்கள்,மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் ஆகிய திடக்கழிவுகளை அகற்றிடும் புதிய நடவடிக்கை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் 145 நபர்களிடமிருந்து வரப்பெற்ற தகவலின் அடிப்படையில் இன்று ஒருநாள் மட்டும் 45.64 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் தகவல் தந்த 145 நபர்களின் இடங்களிலிருந்து பெறப்பட்டு, கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் நிலையத்திற்கு எடுத்துச் சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டப்பட்டது. இப்பணியில் 62 வாகனங்களும், 200க்கும் மேற்பட்ட பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று நடைபெறும் இச்சேவையை பெறுவதற்கு, பொதுமக்கள் முன்கூட்டியே பெருநகர சென்னை மாநகராட்சியின் “நம்ம சென்னை” செயலியில் (App) பதிவு செய்ய வேண்டும் (அல்லது) பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்ற எண்ணிற்கு தகவல் அளிக்கப்பட வேண்டும் (அல்லது) பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலம் பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் (94450 61913) எண்ணிற்கு தகவலை அனுப்ப வேண்டும். இதன் அடிப்படையில் மாநகராட்சிப் பணியாளர்கள் பதிவு செய்த நபர்களின் வீடுகளுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் நேரடியாகச் சென்று, பழைய சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து பாதுகாப்பாகவும் அறிவியல் முறையிலும் அகற்றும் பணிகளை மேற்கொள்வார்கள்.
இந்த நடவடிக்கையால், பொது மக்கள் பொது இடங்களில் பழைய பொருட்களை தூக்கி எறிவதைத் தடுப்பதுடன், தெருக்களை சுத்தமாக வைத்திருக்கவும், அனைவருக்கும் சுகாதாரமான வாழ்விடச் சூழலை உருவாக்குவதற்கும் வழிவகை ஏற்படும்.
சென்னை மாநகரினை தூய்மையாக வைத்துக் கொள்வதற்காக பெருநகர சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் நல் ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






