இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-11-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 10 Nov 2025 5:41 PM IST
டெல்லி; காற்று மாசுபாட்டால் அதிகரித்து வரும் நெஞ்சு பாதிப்புகள்: டாக்டர் எச்சரிக்கை
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டால் டெல்லி-என்.சி.ஆர். பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகளுக்கு கடுமையான சுகாதார பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி மேதாந்தா மருத்துவமனையின் நுரையீரல் நிபுணரான டாக்டர் அரவிந்த் எச்சரிக்கை செய்துள்ளார்.
இன்று காலை 8 மணியளவில் என்.சி.ஆர். பகுதியில் காற்று தர குறியீடு 345 ஆக இருந்தது. இது மிக மோசம் என்ற அளவில் உள்ளது. இதுபற்றி அவர் கூறும்போது, சுவாச பாதிப்புகளால் மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் அதிகளவில் வருகின்றனர். அவர்களில், குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அவர்களுக்கு இருமல், காய்ச்சல், ஜுரம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகிய அறிகுறிகள் உள்ளன. மூக்கொழுகுதல், விரைவாக சுவாசித்தல் உள்ளிட்ட பாதிப்புகளும் காணப்படுகின்றன.
- 10 Nov 2025 5:33 PM IST
தங்கம் விலை ஒரே நாளில் இரண்டு முறை உயர்வு
காலையில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.880 உயர்ந்த நிலையில் தற்போது மாலை மீண்டும் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு பவுன் ரூ.91,840 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.70 அதிகரித்து ரூ.11,480 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.169 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- 10 Nov 2025 4:47 PM IST
சாத்தான்குளம் கொலை வழக்கு - கூடுதல் கால அவகாசம் கோரும் நீதிமன்றம்
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் விசாரணையை முடிக்க மேலும் 6 மாத கால அவகாசம் கோரி சிபிஐ மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. எதற்காக கால அவகாசம்? என்பது குறித்து சிபிஐ பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த முறை 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
- 10 Nov 2025 4:42 PM IST
கோவை விமான நிலையத்தின் பின்புறம் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில், கைதான மூவரையும் அடையாள அணிவகுப்பு நடத்த போலீசார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். கைதான சதீஷ் என்ற கருப்புசாமி (30), குணா என்ற தவசி (20) மற்றும் கார்த்தி என்ற காளீஸ்வரன் (21) ஆகிய மூவரையும் அப்பெண் முன்பு அடையாள அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- 10 Nov 2025 4:15 PM IST
தேர்தலுக்கு பிந்தைய வியூகம் குறித்து பிரசாந்த் கிஷார் மனம் திறப்பு
பீகாரில் வெற்றி பெற்று ஜன் சுராஜ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும், அல்லது எதிர்க்கட்சி வரிசையில் அமர்வோம். ஒருவேளை தற்போது நடக்கும் என்.டி.ஏ ஆட்சியை மாற்ற விரும்பவில்லை என்றால் அடுத்த 5 ஆண்டுகள் மக்களுடன் பயணிப்போம், ஆனால் கூட்டணி ஆட்சியில் இடம் பெற மாட்டோம் என பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
- 10 Nov 2025 4:05 PM IST
பாஜக எம்.எல்.ஏ. வானதி ஸ்ரீனிவாசன் கேள்வி
திமுகவை வீழ்த்துவேன் எனக் கூறும் விஜய், தனியாக எப்படி வீழ்த்த முடியும்? என்ன பலம் அவருக்கு இருக்கிறது? என பாஜக எம்.எல்.ஏ. வானதி ஸ்ரீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
- 10 Nov 2025 3:21 PM IST
தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு
வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 10 Nov 2025 3:18 PM IST
தகுதியுள்ள அனைவருக்கும் உரிமைத் தொகை - மு.க.ஸ்டாலின்
தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும். திமுகவால் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்த முடியாது என அதிமுக கூறியது. மகளிருக்கு 1000 ரூபாய் எதற்கு என தேவையில்லாமல் சிலர் பேசுகின்றனர். எங்கள் அண்ணன் ஸ்டாலின் கொடுக்கும் சீர் என சகோதரிகள் பதில் அளிக்கின்றனர் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- 10 Nov 2025 3:14 PM IST
210 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறலாம் - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
எடப்பாடியார் சொன்ன வழியிலே நாம் செயல்பட்டால் 2026 தேர்தலில் நிச்சயமாக 210 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறலாம் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
- 10 Nov 2025 2:25 PM IST
டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது ஆபத்து - செபி எச்சரிக்கை
அங்கீகாரம் இல்லாத தளங்கள் மூலம் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது ஆபத்தானது. இதுபோன்ற டிஜிட்டல் தங்கத்தை வாங்குவோருக்கு எந்தவித சட்ட பாதுகாப்பும் இல்லை. இவை செபி அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் வராது, அதே நேரம், Gold ETF மற்றும் மியூச்சுவல் பண்ட் வழியான தங்க முதலீடுகள் செபிக்கு கட்டுப்பட்டவை. முதலீட்டாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் செபி எச்சரிக்கை விடுத்துள்ளது.















