இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-05-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 27 May 2025 7:00 PM IST
ரூ,500 நோட்டுகளையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், டிஜிட்டல் கரன்சியை கொண்டு வர வேண்டும் என்று ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி உள்ளார்.
- 27 May 2025 5:59 PM IST
சென்னை விமான நிலையத்தில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள இ-சிகரெட்டுகள், அமெரிக்க டாலர்கள் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள இ-சிகரெட்டுகள், அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த பயணியை பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் பயணியிடம் இருந்து இ-சிகரெட்டுகளை வாங்கி செல்ல வந்த நபரை சுங்கத்துறையினர் தேடி வருகின்றனர்.
- 27 May 2025 5:19 PM IST
வருமான வரி தாக்கல் செய்ய செப்டம்பர் 15 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31 ஆம் தேதியுடன் அவகாசம் முடிவடைய இருந்த நிலையில், அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
- 27 May 2025 5:03 PM IST
ராமேசுவரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் வரும் 31-ஆம் தேதி தமிழக கவர்னர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
- 27 May 2025 4:51 PM IST
சத்தீஷ்காரின் சுக்மா மாவட்டத்தில், போலீசார் முன்னிலையில் 18 நக்சலைட்டுகள் இன்று சரணடைந்தனர். இவர்களில் 4 பேர் பட்டாலியன் எண்.1 பிரிவை சேர்ந்தவர்கள். மொத்தம் 4 பட்டாலியன்களை சேர்ந்த நக்சலைட்டுகள் சரண் அடைந்துள்ளனர்.
இதேபோன்று, தெற்கு பஸ்தார் பகுதியில் தீவிர செயல்பாட்டுடன் இருந்தவர்கள் சரண் அடைந்துள்ளனர் என சுக்மா போலீஸ் சூப்பிரெண்டு கிரண் சவான் கூறியுள்ளார்.
அரசின் சரண் கொள்கையின்படி, செயல்பட்டு வரும் அனைத்துவித பலன்களையும் அவர்கள் பெறுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
- 27 May 2025 4:35 PM IST
- அமெரிக்க தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
- சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு
- மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
- வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் மிரட்டல் வெறும் புரளி என கண்டுபிடிப்பு
- மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து ராயப்பேட்டை போலீசார் விசாரணை
- 27 May 2025 4:14 PM IST
டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்து அதனை அறிவித்துள்ளனர். இதேபோன்று தண்டையார்பேட்டையில் இருந்து விமானங்களுக்கு கொண்டு செல்லப்படும் பெட்ரோல் டேங்கர் லாரிகள் மற்றும் அத்திப்பட்டில் இருந்து இயக்கப்படும் டேங்கர் லாரிகள் முழுவதும் நிறுத்தப்பட்டு உள்ளது என சங்கத்தின் தலைவர் மூர்த்தி கூறியுள்ளார்.
இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரப்படுத்தப்படும் என்றும், இதற்கு ஆதரவாக மற்ற பெட்ரோல் முனையத்தின் டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட கூடிய சூழல் ஏற்பட்டு உள்ளது.
- 27 May 2025 3:58 PM IST
ஜிப்மர் மருத்துவமனை 2027 ஜூன் மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும் - மத்திய இணை மந்திரி தகவல்
புதுச்சேரியில் மத்திய இணை மந்திரி பிரதாப்ராவ் ஜாதவ் கூறியதாவது:-
காரைக்காலில் 470 படுக்கை வசதிகள் கொண்ட ஜிப்மர் மருத்துவமனை 2027 ஜூன் மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும். ஜிம்பர் மருத்துவமனைக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.1,450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
- 27 May 2025 3:48 PM IST
தமிழகத்தில் புதிய கொரோனா இல்லை
தமிழகத்தில் புதிய வகை கொரோனா கண்டறியப்படவில்லை. 10-15 பேருக்கு கொரோனா பரவல் தினமும் ஏற்படுகிறது என்று பொது சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.